வெள்ளி, டிசம்பர் 21

முடிவல்ல ஆரம்பம்

”அம்மா " என்று அழைத்தான் சரவணன்
நான் இங்கு இருக்கின்றேன் சரவணா .என்று கூறினாள் சரவணனின் தாய் சுதா.
 கொஞ்சம் நில்லு நானே வருகின்றேன். என்றாள் சுதா
அம்மா கொஞ்சம் கெதியாக வருகின்றீர்களா?
எதற்கு என்னை கூப்பிட்டாய் சரவணா?
நாங்கள் எல்லோரும் அடுத்த சனிக்கிழமை ஜேர்மனிக்குப் போகப்போகின்றோம் .
அடுத்த சனிக்கிழமையா?
என்ன சரவணா சொல்லுகிறாய் என்னையும் ஜேர்மனிக்கு கூட்டிக்கொண்டு போகிறீர்களா ?
ஏன் அப்படி கேட்டனீங்கள்  அம்மா ?
சரவணா எனக்கும்  ஜேர்மனிக்கு வருவதிற்கு விருப்பம் தான் ஆனால் என்னிடம் ஜேர்மனிய விசா  இல்லையே நான் எப்படி அங்கு வரமுடியும்?
 நான் அன்றைக்கு உங்களிடம் ஒரு விண்ணப்பத்தாளினை தந்து அதனை நிரப்பி உங்களுடைய  கையெழுத்தினை இட்டு தரம்படி கேட்டு  வாங்னேன் ஞாபகமிருக்கா?
ஓம் ஓம் ஞாபகமிருக்கு. அது சரி அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சம்பந்தமிருக்கு அம்மா. நான் அன்றைக்கு ஜேர்மனிய விசாவிற்குரிய  விண்ணப்பத்தாளினைத் தான் .உங்களிடம் தந்து நிரப்பி கையெழுத்து வாங்கினேன்.அன்றைக்கு நீங்கள் நிரப்பிய விண்ணப்பத்தாளுடன் உங்களையும் ஜேர்மனிய தூதரத்திற்கு கூட்டிகொண்டு போனேன் ஞாபகமிருக்கின்றதா ?
ஓம் ஓம் ஞாபகமிருக்கின்றது.
அங்கு உங்களுடைய விண்ணப்பத்தாளுடன் உங்களுக்கு விசா எடுப்பதிற்கு தேவையானவற்றை   கொடுத்து நீங்கள் ஜேர்மனிக்கு வருவதிற்குரிய  விசாவினை எடுத்தேன்.   அதுவும் ஞாபகமிருக்கின்றதா?
சுதா - ஓம் ஓம்  ஞாபகமிருக்கின்றது.
அன்றைக்கு எங்களுடன் நீங்கள் ஜேர்மனி வருவதிற்குரிய  பிளேன் டிக்கற்றினையும் எடுத்துக்கொண்டு வந்தேன் .
அப்ப இப்ப எங்கே போனாய் சரவணா?
அந்த டிக்கற்றில் சனிக்கிழமை ஜேர்மனிக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ஏன் அப்படி செய்தனீ?  சரவணா ரிக்கற் எடுத்தாள்  போகலாம் தானே.
இல்லை அம்மா ரிக்கற் எடுத்த திகதியில் நாங்கள் போகப் போகிறோம் என்பதை முதலில் நாங்கள் ரிக்கற் எடுத்த விமானத்திற்குரிய  இந்த நாட்டில் உள்ள பதிவாளர்களுக்கு அறிவிக்கவேண்டும் இல்லாவிட்டால் எங்களுக்கு என்று பதியப்பட்ட இருக்கைகளை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவார்கள் அப்படி கொடுத்துவிட்டாள் எங்களால் அந்த விமானத்தில் செல்லமுடியாது.
“அம்மா, நாங்கள் இனி எப்ப இங்கே வருவமோ தெரியவில்லை ?
இங்க இருக்கற பொருட்கள்  எல்லாவற்றையும் உனக்கு யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா”
“நானே உன் கிட்ட சொல்லணும் என்று  நினைச்சேன் சரவணா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப் பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில  படங்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாமென்று இருக்கேன்.
”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விற்கவும் நான்  ஏற்பாடு செய்துட்டிருக்கேன். அது விஷயமா கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்.”
சரவணனின் நிழல் மறையும் முன்னே, “ஏ  சுதா ! உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? வீட்டை விற்கச் சொல்லிட்டியா? உனக்கு என்று இருக்கிறதே இந்த வீடு ஒண்று தான். அதையும் வித்து விட்டு என்ன செய்யப் போகிறாய்.

உன் பிள்ள எல்லா பணத்தையும் பிடுங்கிக்கிட்டு உன்னை
நடுத்தெருவுல விட்டுட்டா என்ன செய்வாய் ? பேசாம இங்கயே
இரு. ஜேர்மனி கண்காணாத ஊரு. அங்க போய் என்ன செய்வாய்?.
உனக்கு என்ன தெரியும்?  இல்லை உனக்கு அந்த நாட்டு மொழி
விளங்குமா ?” என்று கத்தினாள் அவளுடைய மச்சாள் பிரியா .
“கொஞ்சம் மெதுவா பேசுங்க அக்கா. மருமக காதுல விழப் போகுது”
“விழட்டுமே. நாட்டுல நடக்காததயா சொல்லிட்டேன். உன் மருமக வேற பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய வேலையில இருக்குறா. இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா, அப்பா, உறவுக்காரங்க எல்லாம் தேவையே இல்ல. சம்பளமில்லாம ஒரு வேலைக்காரி கிடைக்கறான்னு நினைக்கறாளோ என்னவோ உன் மருமக. உடம்புல தெம்பு இல்லாம போனா அப்ப தெரியும் உன் கதி. சாரையெல்லாம் எடுத்துக்கிட்டு சக்கையை தூரப் போடும் போது தெரியும் என் பேச்சில எவ்வளவு உண்மை இருக்குன்னு”. விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“இங்க பாருங்க அக்கா. என் பிள்ளைமேலயும், என் மருமகள்மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அத்தோட எனக்கு இருக்கறது ஒரே பிள்ளை. அவனை விட்டுட்டு நான் ஏன் இங்க தனியா இருக்கணும்.”
“ஏன், உனக்கு உன் புருஷன் வாழ்ந்த ஊர்ல இருக்கணும்ன்னு தோணவே இல்லையா?”
 ”எங்க இருந்தா என்ன அக்கா? உங்க தம்பியோட வாழ்ந்த அருமையான நாட்கள மனசுல அசை போட்டுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கையை  கழிச்சிடுவேன்”.
 “ம்... எப்படியோ போ. எனக்கென்ன, எனக்கு தோணினதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். நான் நாளைக்கு கிளம்பறேன். காரியமெல்லாம்தான் முடிஞ்சாச்சே. உனக்கு எப்பவாவது நிற்க ஒரு நிழல் வேணும்ன்னு தோணிச்சுன்னா, தேவைப்பட்டா தாராளம வா என் வீட்டுக்கதவு உனக்காக  எப்போதும் திறந்தே இருக்கும்.”
“அந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா நான் உங்களைத் தேடி வரேன் அக்கா” என்று சொல்லி அவளுடைய மச்சாளின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் சுதா
இவர்கள் பேசியதில் என்ன புரிந்ததோ, சுதாவின்  நான்கு வயது பேரன் சுரேஷ் தன் மழலைக் குரலில், “பாட்டி சனிக்கிழமை நீங்க எங்க கூட ஜேர்மனிக்கு வந்துடணும்” என்றான்.
“கண்டிப்பா உங்க கூடதான் வரப் போகிறேன்” என்றாள் சுதா.
மே மாத வெயில் சுட்டெரிக்க, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் சுதா. ’ஏன் இப்படி  எல்லாருக்கும் ஒரு எண்ணம் ஊர் உலகில் நடப்பதைத் தானே சொல்கிறேன் என்கிறார்கள். ஏன் ஊர், உலகத்துல நல்ல பிள்ளைங்களே இருக்கமாட்டாங்களா?', என் பிள்ளை அப்படி ஒரு நல்ல பிள்ளையா இருப்பான்னு நான் நம்பறேன்.
தங்கை   ரேகா என்னடான்னா, ‘அக்கா ஜாக்கிரதை, உன் பிள்ளை நல்லவனா இருக்கலாம். ஆனா முழுக்க நம்பிடாத. உனக்குன்னு கொஞ்சம் பணம், காசு வெச்சுக்கோன்னு’ சொன்னா. ஒரு வேளை நான் இவங்களுக்கெல்லாம் பாரமா வந்துடுவேனோன்னு பயப்படறாங்களோ என நினைத்தாள் சுதா.
பக்கத்து வீட்டு பாட்டி கூட, ‘பேசாம இங்கயே இரு சுதா. பிள்ளயை நம்பி போகாதேன்னு சொல்றாங்க. கோவில் குருக்களும் இப்படியே சொன்னாரே. நம்ப பிள்ளயை நாமளே நம்பலைன்னா அப்புறம் வேற யார் நம்புவாங்க. இவங்களுக்கெல்லாம் பூக்கார பூவாயி எவ்வளவோ  பரவாயில்லை. ’யார் பேச்சையும் நீங்கள் கேக்காதீங்கம்மா. உங்க மனசு என்ன சொல்லுகிறதோ அதன்படி செய்யுங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லாதாம்மா இருப்பீங்க. உங்களுக்கு நல்லதுதாம்மா நடக்கும்’ என்றாளே. ஒருவர் எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்களே அதன்படி என்னுடைய எண்ணம் நன்றாக இருந்தாள் கண்டிப்பா எனக்கு எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் என்று பலவாறு யோசித்தாள் சுதா.
அறுபது வருடங்கள் வாழ்ந்த ஊர். திருமணமாகி முதன் முதலில் அந்த ஊரில் பயந்து கொண்டே காலடி எடுத்து வைத்த நாள் ஞாபகம் வந்தது சுதாவுக்கு. பெரிய குடும்பத்துல ஒரே மருமகளாக வாழ்க்கைப்பட்டு வந்தபோது இருந்த சொத்துக்கள் ஒவ்வொரு நாத்தனாருக்கும் திருமணம் ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கடைசியில் இவர்களுக்கு என்று மிஞ்சியது அந்த வீடு ஒன்றுதான்.
உறவென்று சொல்லிக் கொள்ள அவளுடைய கணவரின் பக்கத்தில் அவளுக்கு மிச்சம் இருந்தது மச்சாள் பிரியா ஒருத்திதான்.
சரவணன் உத்தியோகத்திற்காக ஜேர்மனி சென்ற போது சிலவருடங்களின் பின் தானும் சென்று வாழ விரும்பினாள்.ஆனால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை
அதன் பின்னர் சரவணணுக்கு திருமணம் ஜேர்மனியில் நடைபெற்றது. அப்போது அவள் கணவருடன் ஜேர்மனிக்கு சுற்றுலா விசாவில் சென்ற போதும் சுதாவிற்கும்  அங்கேயே போய் வாழ ஆசைதான் ஆனால் அவளுடைய ஆசை அன்று நிறைவேறவில்லை.
அதன் பின்னர் சரவணன்அங்கேயே சொந்த வீடு  வாங்கிக் கொண்டு குடியேறியபோது திரும்பவும் ஒரு தடவை சுற்றுலா விசாவில் கணவருடன் ஜேர்மனிக்கு சென்று திரும்பியதில் இருந்தே வீட்டை விற்று விட்டு மகனுடன் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை  நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது.
நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி என்று இருவர் மட்டும் எதற்காக இங்கு இருப்பது என்பது சுதாவின் வாதம். ஆனால் அவள் கணவர் பிடிவாதமாக சொந்த ஊரை விட்டு வர மறுத்ததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை.
அவர் காலமும் முடிந்தபின் உற்றார், உறவினர் யாரும் இல்லாத ஊரில், அந்த வீட்டில் எதற்கு பூதம் காப்பது போல் தனியே இருப்பது என்றுதான் அந்த வீட்டை விற்று விடச் சொல்லி விட்டாள்.
சனிக்கிழமையன்று உற்றார் உறவினர் அயலவர் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி விடைபெற்றுக்கொண்ட அவர்கள் வாடகைக்கு காரை ஏற்பாடு செய்து விமானநிலையம் வந்தடைந்தார்கள்.
அதன் பின்னர் விமானநிலைய பரிசோதனைகள் எல்லாவற்றையும் முடித்து கொண்டு லுப்தான்ஸா விமானத்தில் ஏறி ஜேர்மனி வந்தடைந்தார்கள்.
ஜேர்மனி வந்து சேர்ந்த போது இரண்டு, மூன்று நாட்கள் மகன், மருமகளின் நண்பர்கள், குறிப்பாக மருமகளின் நண்பர்கள்தான் அதிகம் சுதாவைப் பார்க்க வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லோரும்  அவள் கணவரின் மறைவிற்காக தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர்.
அவர்கள் ஜேர்மனி வந்து சேர்ந்து ஒரு வாரத்தின்  பின்னர்  சுதாவின் மகன், மருமகள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றனர், பேரனும் பள்ளிக்குச் சென்றான் அதன் பின்னர்  என்ன செய்வதென்றே தெரியவில்லை சுதாவுக்கு. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது? என்று சிந்தித்தாள் சுதா.
 சனி, ஞாயிறு  ஆகிய இருநாட்களிலும் சரவணனும் சர்மியும் சுதாவை ஜேர்மனிய இடங்களை காட்ட அழைத்து  சென்றார்கள்.
எல்லா இடங்களையும் பார்த்து ரசித்தாள் சுதா. அதன் பின்னர் அவளை அவர்கள் தமிழர் உணவகத்திற்கு கூட்டிகொண்டு போய் அவளுக்கு விரும்பிய உணவுகளை வாங்கி கொடுத்த  பின்னர் வீடு திரும்பினார்கள்.
அதன் பின்னர் மருமகள் சர்மி, “அத்தை, எங்களுடைய வீட்டிற்கு பக்கத்திலேயே உங்கள மாதிரி பெரியவங்களுக்கு ஆங்கில மொழியில் கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கறாங்க  அந்த வகுப்பிற்கு சென்று படிப்பதில் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது மாமா கூட சொல்லி இருக்கார்
நீங்க அந்த காலத்திலேயே ஆங்கில பேப்பர் எல்லாம் படிப்பீங்களாமே அது இப்ப உங்களுக்கு கை கொடுக்கும். சின்னச் சின்ன விஷயங்களா மெயில் அனுப்பறது, இண்டர்நெட் பாக்கறது, இப்படி எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீங்க கம்ப்யூட்டர் வகுப்புக்கு போகணும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வகுப்பு எடுப்பாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போகலாம்.” என்றாள்.
“கரும்பு தின்னக் கூலியா சர்மி. எனக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது. நான் ரெடி” என்றாள் சுதா
“ஹைய்யா, பாட்டி நீங்களும் என்ன மாதிரி ஸ்கூலுக்குப் போகப் போறீங்களா? ஹா, ஹா, ஹா” என்று கை தட்டி சிரித்தான் பேரன்.
மறுநாள் முதல் தாயின் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தான் சரவணன்.
“அம்மா, வீடு வித்த பணம் எல்லாம் வந்துடுச்சு. அதை உன் பேரில டெபாசிட் செய்திருக்கேன். இந்தாம்மா” என்றான் சரவணன்.
“எனக்கெதுக்குப்பா பணம். இதையெல்லாம் நீயே எடுத்துக்கோ” என்றாள் சுதா
”இல்லம்மா. இப்ப இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும். இதுல இருந்து வர வட்டியை மாசா, மாசம் உன் கிட்ட குடுக்கறேன். உனக்குன்னு சில செலவுகள் இருக்கும்”.
“எனக்கென்னப்பா செலவு, எல்லாம் நீயேதான் செய்துடறயே.”
“அப்படி இல்லம்மா. ஒரு கோவிலுக்குப் போனா, ஒரு பிச்சைக்காரனைப் பாத்தா, ஏன் உன் மனசுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதுக்கு செலவு செய்துக்கம்மா. அத்தை, சித்தி, பெரியம்மா பசங்களுக்கு ஒரு பிறந்த நாள், ஒரு நல்லது கெட்டதுன்னா பணம் அனுப்பி வை. இதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானேம்மா, இவ்வளவு தூரம் வந்ததுக்காக இதையெல்லாம் நிறுத்த வேண்டாம்மா”என்றான்  சரவணன்..
”உன்னுடைய திருப்திக்காக இதை வாங்கிக்கறேன் சரவணா” என்றாள் சுதா.
நான்கு, ஐந்து மாதங்களில் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்ப, டைப் செய்ய, மற்றும் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொண்டு விட்டாள் சுதா.
”அம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம ஒரு இடத்துக்குப் போறோம், தயாரா இரும்மா” என்றான் சரவணன்.
அதற்குள் சுரேஷ் “பாட்டி உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் தானே” என்றான்.
“என்ன சரவணன், என் பிறந்த நாளுக்காகத்தான் வெளியே போறோமா? கொண்டாட்டமெல்லாம் எதுவும் வேண்டாம்ப்பா”.
“கொண்டாட்டமெல்லாம் எதுவும் இல்லம்மா”
ஞாயிற்றுக்கிழமை அந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விடுதிக்குள் நுழைந்ததும், எல்லா குழந்தைகளும் ஒன்று சேர அவளுக்கு அவர்களுடைய மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாய் குழறிக் கொண்டு வாழ்த்தியதைக் கேட்டதும் திக்கு முக்காடிப் போனாள்   சுதா. அவள் தன்னுடைய கையாலேயே அந்தக் குழந்தைகளுக்கு இனிப்புக்களை வழங்கினாள் . அதன் பின்னர் அவர்கள் எல்லோரும்  அன்று அந்த குழந்தைகளுடன் மதிய உணவு உண்டனர் .பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் அன்றைய பொழுதை சந்தோசமாக கழித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சர்மி,  சுதாவின்  அறைக்குள் நுழைந்து, “அத்தை இங்க வாங்க. இது உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் பரிசு” என்றாள். ஒரு புத்தம் புதிய கம்பியூட்டர் மேசையில் அமர்ந்திருந்தது.  சுதாவுக்கு ஆச்சரியம். இதை எப்ப வாங்கினீர்கள்? எப்ப என் மேசையில் செட் செய்தீர்கள்? என்று  ஆச்சரியத்துடன் மருமகளைப் பார்த்தாள் சுதா.
“அத்தை உங்க மகனோட நண்பர்கிட்ட நாங்கள் வாங்கிய புதிய கம்பியூட்டரை கொடுத்து அதை சரியான இடத்தில் வைத்து அதற்கு தேவையான இண்டநெற் தொடர்புகளை ஏற்படுத்தும்படி கூறி வீட்டு சாவியை குடுத்துட்டு வந்தோம். நாங்கள் கூறியவற்றை செய்து வைத்திருக்கின்றார்கள் வாங்க அத்தை உக்காருங்க. உங்க கையால முதல்ல ஆன் செய்யுங்க”
”இல்ல  சர்மி, நீயே ஆன் செய்.”
“சரி அத்தை. அத்தை! இங்க பாருங்க இதுக்குப் பேருதான் ப்ளாக். இவங்க மீனாட்சி அம்மா. இவங்களுக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. இவங்க ஜானகி அம்மா, இது இவங்களோட ப்ளாக். இவங்களோட பதிவுகளுக்கு நீங்க கருத்து சொல்லலாம். அத்தை, உங்களுக்கும் வாழ்க்கையில நிறைய அனுபவங்கள் இருக்கும். எங்களுக்கும் அப்புறம் வரப்போற சந்ததிகளுக்கும் நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல யாரும் இல்ல. அதனால நீங்களும் இது மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, உங்க அனுபவங்கள், சமையல் குறிப்புகள், அப்பறம் உங்க எண்ணங்கள பதிவு செய்யலாம் அத்தை. ஆரம்பத்துல கொஞ்சம் கண்ணக் கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கும். போகப் போகச் சுலபமாகிடும். நானும் உங்களுக்கு எப்படி பதிவு போடணும்ன்னு அப்பப்ப சொல்லித்தாரேன் அத்தை.” என்று மருமகள் சொன்னதும் சுதா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.சுதா மனதுக்குள், “யாரப்பா சொன்னது, பிள்ளைங்கன்னா நம்ம சொத்தை எல்லாம் பிடிங்கிக்கிட்டு நம்பள கொண்டு போய் முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுவாங்கன்னு. இந்த மாதிரி நல்ல பிள்ளைங்களும் இருக்கத்தான் செய்யறாங்கப்பா இந்த உலகத்துல” என்று சொல்லிக்கொண்டு, என்னுடைய இத்தனை வருட பிறந்த நாட்களில் இன்று மாதிரி மகிழ்ச்சியா நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி”.
சரவணனும் சர்மியும் ஒன்றாக, “நன்றி எல்லாம் சொல்லக்கூடாது, நாங்களும் கடமைக்காக செய்யல. உண்மையா ஆசையாதான் செய்யறோம்” என்றனர்.
தனக்கும் புரிந்தது போல் “ஆமாம், ஆமாம்” என்றான் குட்டிப்பையன் சுரேஷ்
.இதையெல்லாம் பார்த்த நிறைவான மனத்துடன், தொலைபேசியை எடுத்து ஊரில் உள்ள தனது தங்கையிடமும் மச்சாளிடமும்  இவையாவற்றையும் கூறி  மகிழ்ந்தாள்  சுதா அப்போது அவளுடைய மனதில் இது முடிவல்ல ஆரம்பம்  என்ற ஒரு நம்பிக்கை பிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.